கேரளாவில் இருந்து கோவைக்கு மதுபானம் கடத்தல் - போலீஸ் வலைவீச்சு

25 June 2021


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஊரடங்கு அமலில் உள்ளது, தொற்று அதிகமாக உள்ள காரணத்தால் கோவை மாவட்டத்தில் மதுக்கடையை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால், கோவை பாலக்காடு எல்லையிலுள்ள மது பிரியர்கள் மது வாங்க கேரளாவிற்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
கேரளாவில் கடந்த ஒரு வாரம் முன்பு தான் மதுக்கடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் நபர்களை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். 
அவரது உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் பொள்ளாச்சி தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் போலீசார் 2-வது நாளாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

*கைது*

தமிழக-கேரள எல்லையில் உள்ள நடுப்புணி, கோபாலபுரம், ஜமீன் காளியாபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தனி, தனி குழுக்களாக பிரிந்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். போலீசார் சாதாரண உடையில் வாகன சோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும், மதுபிரியர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் 16 வழக்குகளும், வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

இதுதொடர்பாக போலீசார் 21 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14 லிட்டர் கள், 65.5 லிட்டர் கேரள மதுபாட்டில்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கதிர் பிரபாகரன்,
நிருபர்,
கோவை மாவட்டம்