அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

21 June 2022

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரிய மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.இது அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.