திருவாரூர் அருகே சந்திரசேகரபுரம் சந்தன வாய்க்கால் பாலத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

28 June 2021


திருவாரூர் அருகே சந்திரசேகரபுரம் சந்தன வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமம் வலங்கைமான்- பாபநாசம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த சாலை ஓரமாக சந்தன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் குறுக்கே சாலை வசதியுடன் பாலம் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் தற்போது பக்கவாட்டு தடுப்புச் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்த நிலையில் சாலையும் சேதமடைந்துள்ளது.

இதனால் அவ்வழியே செல்லும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாலம் மற்றும் சாலையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா?