நாமக்கல் மாணவி கீதாஞ்சலி நீட் தேர்வில் முதலிடம்..!

25 January 2022

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடந்தது.


இந்த தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி அந்தந்த தேர்வர்களின் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதில், நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி மையத்தில் படித்த தும்மங்குறிச்சியை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி, சந்தை பேட்டைபுதூரை சேர்ந்த மாணவர் பிரவீன் ஆகியோர் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.


இந்நிலையில், வருகிற 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், நேற்று (24-ம் தேதி) 2021 - 2022-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ். படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த தரவரிசை பட்டியலில் மாணவி கீதாஞ்சலி முதலிடமும், மாணவர் பிரவீன் 2-வது இடமும் பிடித்துள்ளனர்.