சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்?

24 January 2022

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் வயது (22), இவர் பி.எஸ்.சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு கேமராமேனாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை பெரம்பூர் பி.பி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார். அங்கு நான்கு நண்பர்கள் சேர்ந்து பிரபல தனியார் சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் (Chicken) ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.


ரஞ்சித் அவரது வீட்டிற்குச் சென்று இரவு 10 மணியளவில் இடது பக்கம் நெஞ்சு முழுவதும் வலிக்கின்றது எனக் கூறியுள்ளார், இதனையடுத்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது அண்ணன் அவரை அழைத்துக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு (Govt Hospital) சென்றுள்ளனர், செல்லும் வழியிலேயே ரஞ்சித் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். சிக்கன் சாப்பிட்ட நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார் மற்ற மூன்று பேரும் நலமாக உள்ளனர். இதனால் ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.