உள்ளாட்சிக்கு உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம்: கமல்ஹாசன்

21 July 2021


தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்காக சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையாகச் செயல்படுவதற்கு நிதியாதாரம் முக்கியமான ஒன்று என்றும், உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீட்டு முறை குறித்து தமிழ்நாடு அரசு அவசியம் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தேவைகளைத் திட்டமிடுவதிலும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கும் உள்ளாட்சி அமைப்பு, சுதந்திரமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டது என்பதால் உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு முறையாக இல்லாததால், கிராம சபைக் கூட்டங்களும், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் சம்பிரதாயச் சடங்குகளாக முடிந்து போகின்றன என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், இதன் காரணமாக, கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன என கூறியுள்ளார்.

எந்தெந்த காலகட்டத்தில், எவ்வளவு நிதி வழங்கப்படும் என்ற தெளிவான விவரங்களை வெளியிடும் கேரளா, மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் வழக்கத்தை தமிழ்நாடு அரசும் பின்பற்றலாம் எனவும் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

மாநில சுயாட்சிக்கு நெஞ்சை நிமிர்த்தி குரல் கொடுத்த அறிஞர் அண்ணா. மா.பொ.சிவஞானம், கருணாநிதியின் வழி நடக்கும் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்புத் திட்டத்தை இந்த பட்ஜெட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.