செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க கோரிக்கை

25 January 2022

செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்கக்கோரி பைக்கில் பேரணியாக சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் எம்எல்ஏ ஒ.ஜோதியிடம் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வந்தவாசியில் நடந்த கூட்டத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நினைவூட்டும் விதமாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்க எம்எல்ஏ ஒ.ஜோதிடம் கோரிக்கை மனு அளிக்க செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி செய்யாறு திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கிய பைக் பேரணி மார்க்கெட், காந்தி சாலை, ஆற்காடு சாலை வழியாகச் சென்று எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதிடம் முதல்வரை சந்திப்பதற்கான மனு அளித்தனர். நிகழ்ச்சியில் செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அ.பரணிராஜன், வி.ரவி, எம்.புகழேந்தி, ஒருங்கிணைப்பாளர் ப.நடராஜன் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேசன், தேமுதிக, கட்சி சார்பற்ற விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் செய்யாறை மாவட்டமாக்கக் கோரி தனித்தனியே எம்எல்ஏ ஒ.ஜோதியிடம் மனு அளித்தனர். தொடர்ந்து செய்யாறு ஆர்டிஓ விஜயராஜ், தாசில்தார் சுமதி ஆகியோரிடம் செய்யாறு தலைமை இடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்கக்கோரி செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.