திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.

25 September 2021

தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ’’திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகல் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும், எனது பதிலுரையில் 2 வாக்குறுதிகளும், நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும், அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் 64 வாக்குறுதிகளும் இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டுமக்களுக்கு தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்.

மேலும் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் ஏழரை விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல்; இப்படி இடம்பெற்றவர்களுக்கு கட்டணம் முழுமையாக செலுத்தவேண்டியது இல்லை, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப்பொருட்களின் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணச்சலுகை, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புநிதி போன்ற தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும், சம்பிரதாயத்திற்கு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு வீடியோ மூலம் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.