ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், வைகோ கோரிக்கை!

22 July 2021


ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ  நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். அப்போது அவர் விடுத்த கோரிக்கை:

"திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம், ரயில்வே பணி இடங்களுக்கான தேர்வுகளை, ஜூலை 23 முதல் 31 வரை தேர்வுகள் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

தமிழ்நாட்டின் மதுரைக் கோட்டமும், திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்ளே இடம் பெறுகின்றது.

கேரள மாநிலத்தில், ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில், மதுரைக் கோட்டத்திற்கு உள்ளே ஒரேயொரு மையம் கூட இல்லை.  

எனவே, தமிழ்நாட்டு இளைஞர்கள், தேர்வுகளை எழுதுவற்காகக் கேரளத்திற்குச் சென்று, ஒரு வாரம் வரையிலும், விடுதிகளில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், கேரளாவில் கொரோனா தொற்று இன்னமும் கடுமையாகத் தாக்கிக் கொண்டு இருப்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே, இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது.

ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்கிற்கு நான் கடுமையான எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், தாங்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தக் கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதன் முதல் கட்டமாக, நாளை தொடங்க இருக்கின்ற இந்தத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்; அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டில், சமூக இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி போதுமான தேர்வு மையங்கள் அமைப்பதுடன், படித்து வேலை இல்லாமல் இருக்கின்ற, தமிழ்நாட்டின் தகுதி உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சம நீதி கிடைத்திட ஆவன செய்திடுமாறு, தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.” இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.