தி லயன் கிங் அடுத்தப்பாகம் - ஆஸ்கார் இயக்குநர் பேரி ஜெக்கின்ஸ் இயக்குகிறார்!

30 September 2020

தி லயன் கிங் படத்தின் அடுத்தப் பாகத்தை ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர் பேரி ஜெக்கின்ஸ் இயக்குகிறார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு டிஸ்னி தயாரித்த"தி லயன் கிங்” பெரும் வசூலைக் குவித்தது. தமிழிலும் வெளியாகி வெற்றியடைந்தது. இதன், அடுத்தப் பாகத்தின் கதை தயாரிப்பு பணிகளில் தற்போது பேரி ஜெக்கின்ஸ் ஈடுபட்டு வருகிறார், என்பதை அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான தி லயன் கிங் படத்தை ஜான் பெவ்ரோ இயக்கியிருந்தார். 1994 ஆம் ஆண்டு கார்டூன் படமாக வெளியான லயன் கிங் படம் 90 கிட்ஸின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. அதைத்தான், பல்வேறு தொழில்நுட்பத்துடன் மீண்டும் எடுத்து கடந்த ஆண்டு வெளியிட்டது டிஸ்னி. முஃபாஸா, அதன் மகன் சிம்பா, முஃபாஸாவின் சகோதரன் ஸ்கார் உள்ளிட்ட சிங்கங்களின் கதாப்பாத்திரங்கள் மறக்கவே முடியாது. 

இதுகுறித்து பேரி ஜெக்கின்ஸ் பேசும்போது, "நான் தி லயன் கிங் கதாபாத்திரங்களுடன் தான் வளர்ந்தேன். நட்பு மற்றும் அன்பு, மரபு ஆகியவற்றைச் சொல்லும் இந்த அற்புதமான கதையை விரிவுபடுத்துவதில் டிஸ்னியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை பெறுவதுடன், ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோருக்குள் உள்ள நாட்டு மக்களின் வாழ்க்கையையும் ஆன்மாவையும் விவரிக்கும் எனது பணியை மேலும் விரிவுபடுத்துவது என்பது ஒரு கனவு நனவாகும்”என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.