30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்டனர்

14 November 2021



கோத்தகிரி நகரில் உள்ள முக்கிய குடியிருப்புப் பகுதியில் இருந்த 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

கோத்தகிரி அருகே உள்ள கிளப் ரோடு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வனத்துறைக்குச் சொந்தமான லாங் வுட் சோலையை ஒட்டி இப்பகுதி அமைந்துள்ளதால் கரடி, காட்டெருமை, சிறுத்தை, முள்ளம் பன்றி, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.  
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு இந்த குடியிருப்புப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் சிறுத்தை ஒன்று விழுந்து, வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் 

கோத்தகிரி வனச்சரகர் சிவா தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக சிறுத்தை தண்ணீருக்குள் மூழ்காமல் தடுக்கும் வகையில் மூங்கிலாலான கூடையை கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கினர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுத்தை அந்த கூடைக்குள் அமர்ந்துக் கொண்டது. அந்த கூடையை தண்ணீருக்கு சற்று மேலாக தூக்கி காட்டி வைத்தனர். மேலும் கிணற்றுக்குள் தவறிவிழுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா? அல்லது வலை மூலம் மீட்டு, கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதா? என முடிவு செய்வதற்காக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி பரவியதையடுத்து சிறுத்தையை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். எனவே கிணற்றின் அருகே பொதுமக்கள் செல்லாத வகையில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் முதுமலை வனவிலங்குகள் சரணாலய கால்நடை மருத்துவர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரைஜ் மற்றும் கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (பொறுப்பு) மஞ்சுநாதன் ஆகியோர் அறிவுரையின் படி, நீலகிரி மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் நீரஜ்  சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதை தவிர்த்து, கிணற்றுக்கு வெளியே கூண்டு வைத்து, வலை மூலம் கிணற்றை முழுவதுமாக மூடி, கூடையுடன் சிறுத்தையை வெளியே கொண்டு வந்து கூண்டிற்குள் செல்ல வைத்துப்பிடிக்க முடிவு செய்தார். பின்னர் கிணற்றை மூடி முழுவதுமாக பிளாஸ்டிக் கயிற்றாலான வலை போட்டு மூடப்பட்ட பிறகு கிணற்றுக்கு அருகாமையில் கூண்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை அமர்ந்துள்ள மூங்கில் கூடையைத்  வெளியே தூக்கும் போது, சிறுத்தை அமர்ந்திருந்த மூங்கில் கூடை நழுவி மீண்டும் கிணற்றுக்குள் சென்றதால் அதை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல முறை மேற்கொண்ட முயற்சிக்குப் பின் சிறுத்தையை கூண்டுடன் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். வெளியே வந்த சிறுத்தையை  வனத்துறையினர் லாவகமாக கூண்டிற்குள் செல்ல வைத்து பிடித்தனர். கூண்டில் சிக்கிய சிறுத்தையை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் விடுவிப்பதற்காக அங்கிருந்து அப்பர் பவானி வனப்பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால்  சற்று நேரம் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது..