பருத்தி ஏலம் குவிண்டால் ரூ.7,901-க்கு விலை போனது

10 September 2021


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.7,901-க்கு விலை போனது.

திருவாரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏல சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்.

இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில்  கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 901-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 309-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 853-க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 324 குவிண்டால் கொள்முதல் செய்யப்பட்டது.

*நிருபர் மீனா திருவாரூர்*