டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! உணர்த்தும் அபாயம் என்ன?

17 May 2022

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. தற்போதைய பொருளாதார சூழலின் அடிப்படையில் மே மாத இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 78ஐ தாண்டக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணங்களாகும்.


டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடையும் சமயங்களில், டாலருடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு கூடுதலான ரூபாயை செலவு செய்ய வேண்டியிருக்கும். சுருக்கமாக சொல்வது என்றால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அதிக அளவில் செலவாகும்.


சாதாரண மனிதனை இது பாதிக்குமா?


மேலோட்டமாக பார்த்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது சாதாரண பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், இதை ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.


வீட்டு செலவுகள் அதிகரிக்கும்


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை ஏற்கனவே அதிகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதன் எதிரொலியாக எரிபொருள்களின் விலை உயருவது மட்டுமல்லாமல் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையிலும் அது பிரதிபலிக்கும்.


இறக்குமதி செய்யப்படும் மொபைல் ஃபோன், லேப்டாப், சூரிய மின் தகடு ஆகியவற்றுக்கான உதிரி பாகங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை அதிகரிக்கும்.


வெளிநாட்டுக் கல்வி


வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் பல கட்டணங்களை டாலரில் பெறுபவை. அத்தகைய சூழலில், டாலருக்கு நிகராக நீங்கள் செலுத்தும் இந்திய ரூபாய் என்பது அதிகமாக இருக்கும். மேலும், வெளிநாட்டில் செலவு செய்ய பணம் மாற்றும் போதும் அதிக பணம் தேவைப்படும்.


வெளிநாட்டு பயண செலவு


கோடைகால விடுமுறையை ஒட்டி, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், அந்த செலவு அதிகரிக்கும். உதாரணத்திற்கு முன்பு ரூபாய் மதிப்பு 75ஆக இருந்த சமயத்தில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற நீங்கள் ரூ.7.5 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றால், இப்போது 78 என்றானால், அதே தொகையைப் பெறுவதற்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும்.


பணப்பரிமாற்றம்


வெளிநாடுகளில் நீங்கள் கரன்ஸிகளை மாற்றும் போது கூடுதல் தொகை கிடைக்கும். அதாவது, வெளிநாட்டில் வேலை செய்வோர் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்கு பணம் அனுப்பும்போது கூடுதல் தொகை கிடைக்கும்.


வெளிநாட்டு முதலீடுகள்


அமெரிக்க பங்குச் சந்தையில் உங்களுக்கு ஏற்கனவே முதலீடு இருக்கிறது என்றால், இப்போது உங்களுக்கு அதில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதாவது, டாலருக்கு நிகரான மதிப்பு 70ஆக இருக்கும்போது ஒரு நிறுவனத்தின் 100 பங்குகளை நீங்கள் தலா 10 டாலர் என விலை கொடுத்து வாங்கியிருக்கிறீர்கள். அதாவது ஒரு பங்கின் விலை 700. மொத்தமாக ரூ.70,000. இப்போது பங்கின் விலை 15 டாலராக அதிகரித்து விட்டதாக வைத்துக் கொண்டால், உங்களுக்கு ரூ.1.05 லட்சம் கிடைக்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள ரூபாய் மதிப்பின்படி ரூ.1.15 லட்சம் கிடைக்கும்.