தமிழகத்தில் ஓட்டுப்பதிவு துவங்கியது! இரவு 7 மணி வரை ஓட்டு போடலாம்

06 April 2021

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று(ஏப்.,6) காலை 7:00 மணிக்கு துவங்கியது. வாக்காளர்கள் அனைவரும் இரவு, 7:00 மணி வரை, ஓட்டு போடலாம்.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல், ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 12ல் துவங்கி, 19ல் நிறைவு அடைந்தது. மார்ச் 22ல், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின், அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், பிரசாத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம், நேற்று முன்தினம் (ஏப்.,4) இரவு, 7:00 மணியுடன் நிறைவடைந்தது.

 தமிழகத்தில் இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு முடிவடைகிறது. ஓட்டுச் சாவடிகளில், கையுறை மற்றும் கிருமி நாசினி என பல சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மறக்காமல் முக கவசம் அணிந்து, ஓட்டு போட்டு, ஜனநாயகக் கடமையாற்றுங்கள் வாசகர்களே! வாக்காளர்கள் அனைவரும், யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்பதை அறிந்து, சின்னங்களை கவனமாய் பார்த்து, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்.