ராமன் தம்பி பரதனுக்கு கூறிய அறிவுரைகள்...!

09 October 2020

தந்தையான தசரதரின் உத்தரவுப்படி காட்டுக்கு புறப்பட்டார் ராமன். அவரைக் காண வந்த தம்பி பரதன் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அயோத்திக்கு வருமாறு அழைத்தார். ''தந்தையின் உத்தரவை ஏற்று காட்டில் வாழும் நான், நாடாளும் பொறுப்பை ஏற்றால் தந்தையை அவமதிப்பதாகி விடும்'' என தெரிவித்தார். தம்பியை அமைதிப்படுத்த அறிவுரைகள் கூறினார். அதன் தொகுப்பு ராமகீதை எனப்படுகிறது.

1. உறவைக் கண்டு மகிழவும், பிரிவைக் கண்டு வருந்தவும் கூடாது. இரண்டையும் இயல்பாக எடுத்துக் கொள். எந்நிலையிலும் சஞ்சலமடையாத மனப்பாங்கை வளர்த்துக் கொள்.

2. கடலை நோக்கிச் செல்லும் நதி மீண்டும் கடலில் இருந்து திரும்ப முடியாது. கடல் என்பது பரம்பொருள். சரணடைந்தால் கடவுளோடு ஐக்கியமாகும் பேறு கிடைக்கிறதே! நடப்பதெல்லாம் நன்மைக்கே. புது இரவு தான் வருமே தவிர இனி போன இரவு வராது.

3. கோடை காலத்தில் சூரிய கிரகணங்கள் தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்குகின்றன. அதைப் போல இரவும், பகலும். நம் வாழ்நாளை நம்மிடம் இருந்து உறிஞ்சி எடுக்கின்றன. எத்தனை நாள் என்ற கணக்கு தெரியாத போது, மகிழ்ச்சியும், அழுகையும் ஏன்?

4. சூரியன் உதித்ததும் புதிய நாள் பிறந்தது என மகிழ்கிறோம். அதன் பின்னணியில் ஆயுளில் ஒருநாள் குறைகிறது என்ற உண்மையை உணரத் தவறுகிறோம். எந்த சந்தோஷத்துக்குப் பின்னாலும் ஒரு துக்கம் நிற்கிறது. எந்தத் துக்கத்திற்கும் நிழலாக ஒரு சந்தோஷம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்.

5. பழுத்ததும் மரத்துடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு பழம் மண்ணில் விழும். தொடர்பை விட்டது பழமா அல்லது மரமா என ஆராயாமல் பழுத்ததன் பலனாக 'விலகும் பக்குவம்' ஏற்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி மனம் பக்குவமானால் (பழுத்தால்) பிரிவோ, ஏன் மரணம் கூட பிரச்னையாக இருக்காது.

6. கடலில் மிதக்கும் கட்டைகளின் போக்கு நீரின் ஓட்டத்தைப் பொறுத்தது. கட்டைகளைப் பொறுத்தவரை இணைந்தால் மகிழ்வதோ, பிரிந்தால் அழுவதோ கிடையாது. தண்ணீரின் போக்கில் அவை பயணிக்கும் பக்குவம் படைத்தவை. அதே போல நாமும் வாழ்வில் பலரையும் சந்திக்கிறோம், பிரிகிறோம் அவ்வளவு தான். பிரிதல் என்பது தவிர்க்க முடியாது என்பதை சந்திப்பின் போதே உணர்ந்தால் வருத்தம் ஏற்படாது.

7. உண்மை தான் சுகம். சத்தியம் தான் இன்பம். உண்மையை பின்பற்றுபவனுக்கு எதிர்ப்புகள் ஆயிரம் குறுக்கிட்டாலும் மனசாட்சி ஆதரவாக குரல் கொடுக்கும். இந்த நிலை எப்போது கைவசப்படும்? இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் போது தான். தேவைகளை சுருக்கி விட்டால் வாழ்வில் சுகம் வரும். 'போதும்' என்ற மனமே பொன் செய்யும் மருந்து.