ராஜபாளையம் : தனியாக சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் 4 சவரன் தங்க நகை பறிப்பு !

13 April 2021

ராஜபாளையம் அருகே மிதிவண்டியில் தனியாக சென்ற பெண்ணிடம் இருந்து பட்ட பகலில் 4 சவரன் தங்க நகை பறித்து செல்லப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் உள்ள காமராஜர் சாலையை சேர்ந்தவர் ஆக்னெஸ்ட் கேத்ரின். இவரது கணவர் கதிர்வேல்முருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்து விடவே தனது இரண்டு மகன்களுடன் தற்போது தனியாக வசித்து வருகிறார்.

வீடுகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு துணி தைக்கும் வேலை செய்து வருகிறார். இன்று காலை அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று விட்டு, மிதி வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தவரை கீழே தள்ளி விட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

நகையை பறித்துக் கொண்டு ஓடிய அடையாளம் தெரியாத நபர், தண்டவாளத்திற்கு அடுத்து நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற போது, அருகே இருந்த ஒருவர் அவரை பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது கீழே விழுந்த திருடன் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ஓடி தப்பி சென்று விட்டார். இது குறித்து கேத்ரின் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் கேத்ரின் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.