பல்லாவரம் அருகே மனைவி, மகன், மகளை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை..

28 May 2022

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் கடன் தொல்லையால் மனைவி, மகன், மகளை கொலை செய்த நபர், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஹரிகிருஷ்ணன் என்ற 2ம் வகுப்பு படிக்கும் மகனும், நித்யஸ்ரீ என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர். நேற்று திருமண நாள் என்பதால் அதனை கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி உள்ளனர்.


இந்நிலையில் காயத்ரியின் தந்தை திருப்பதி பிரசாதத்தை மகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கும் கொடுப்பதற்காக பிரகாஷ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மரம் அறுக்கும் இயந்திரம் மூலமாக மனைவி, மகள் மற்றும் மகனை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது. கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை பிரகாஷ் எடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்த பிரகாஷின் மனைவி காயத்ரி, அருகிலேயே நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். பிரகாஷ் சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். குடும்பத்தையே கொலை செய்துவிட்டு பிரகாஷ் தானும் தற்கொலை செய்துகொண்டதற்கு கடன் தொல்லை தான் காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.