பட்டினப்பிரவேசமும் ஆதீனங்களின் குமுறலும்

04 May 2022

பட்டின பிரவேசத்தை தடுப்பது மாதிரியான இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டால் ஒரு அமைச்சரும் சாலையில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ராமானுஜ ஜீயர் மிரட்டல் விடுத்துள்ளார். தருமபுரம் ஆதினத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் என்ற பாரம்பரிய நிகழ்ச்சிக்‍கு, அனுமதி கொடுக்க மறுத்துள்ளதை அடுத்து பல்வேறு தரப்பினரும் எதிர்ர்பு தெரிவித்துவருகின்றனர். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். முன்னதாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த மாவட்ட நிர்வாகத்துக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்தார்.


குருவின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதில், தனது உயிரே போனாலும் கவலையில்லை என்றும், குருவிற்காக தானே பல்லக்கு சுமப்பேன் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.


பாரம்பரிய விஷயங்களில் அரசு தலையிடுவது தொடர்பாக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பழமையான சைவ ஆதீன மடமான தருமபுர ஆதீனம் மயிலாடுதுறையில் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, அந்த மடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூதவூடல் நீத்தார். இதையடுத்து தருமபுர ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 2019 டிசம்பர் 13ஆம் தேதியன்று ஞானபீடம் ஏறினார். அப்போது, வழக்கமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தாவை அமர வைத்து, ஆதீனத்தில் உள்ளவர்கள் அவரை சுமந்து வந்தார்கள்.


இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. அதன்பிறகு, ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்துவரும் திராவிடர் கழகம் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி,
பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தார்.


மனித உரிமைக்கு எதிரானது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் அமர்ந்திருக்கும் பல்லக்கை மனிதர்கள் தூக்கிச் செல்லும் வழக்கத்துக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது.இதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி பலரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.


இந்த நிலையில், பட்டினப்பிரவேச நிகழ்ச்சி பாரம்பரியம் மிக்கது அதற்கு தடை விதித்தது வருத்தம் அளிப்பதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகரும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தமிழக முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். உன்னால் திருப்பணி செய்ய முடியுமா, ஊருக்குள் நுழைய முடியுமா என ஆளும்கட்சியினர் மிரட்டுகிறார்கள் என்று ஆளும்கட்சியினர் மீது குற்றம் சுமத்தும் அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


எனவே, இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிடப் போவதாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளதை அடுத்து பட்டினப்பிரவேச சர்ச்சை உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.