சர்ச்சைக்கு பேர் போன நடிகை

05 May 2021

மகாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக ஆகட்டும், விதி மீறல் சர்ச்சையில் தனது மும்பை வீடு இடிக்கப்பட்ட விவகாரமாகட்டும், எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலுடன் சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதில் சளைத்தவர் அல்ல கங்கனா ரனாவத்.

மும்பையில் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மர்மமான முறையில் விடுதி அறையில் இறந்து கிடந்த சம்பவத்தை எதிர்த்து வெளிப்படையாக குரல் கொடுத்த கங்கனா, அவரது சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி சர்ச்சையை எழுப்பினார்.

மும்பை பாலிவுட் திரையுலகுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து சுஷாந்த் சிங் வழக்கு, பாலிவுட் போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டு விவகாரத்தில் அவர் சிபிஐ மற்றும் போதைப்பொருள் தடுப்புத்துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா, இந்திய அரசியல் போன்றவற்றை கடந்து சில நேரங்களில் தமிழக உள்ளூர் விவகாரங்களிலும் கங்கனா தலையிட்டு கருத்துகளை பதிவிடுவார். அவர் சமீபத்தில் கவனம் செலுத்தியது மேற்கு வங்க தேர்தல் தொடர்புடையது.

தமது சமூக ஊடக பக்கம் வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கங்கனா, வெளிப்படையாகவே மோதியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் ஆதரிப்பார். அவரது சர்ச்சை கருத்துகள், அரசியல் ரீதியாக எதிர்க்கப்படும் வேளையில், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

- கொற்றவை நியூஸ் ஆசிரியர் குழு