கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்க

26 August 2021

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நிலையான வழிகாட்டு விதிமுறைகளுடன் மாநில அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் தளர்வுகளின் போது அறிவிக்கப்பட்ட வழிகாட்டு விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், "உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதி பல உணவகங்களில் பின்பற்றப்படவில்லை. இதேபோல திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளிலும், இறுதிச் சடங்குகள், குடியிருப்புகள், கடைகள் மற்றும் சாலைகளிலும் கூட கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாதது தெரியவந்துள்ளது. எனவே இது போன்ற இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

கேரளாவில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளதால் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி இரு தவணைகளும் போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே கேரளாவிலிருந்து வந்து செல்வதை ஊக்குவிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.