மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா!

14 April 2021

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி தமிழகத்தில் 16 வது சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்தது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவந்தனர். மேலும் தேர்தல் முடிந்த கையோடு சட்டமன்ற வேட்பாளர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் திமுக எம்எல்ஏவும், வேட்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவந்த இவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி ஒருவாரமாக வீட்டில் இருந்தவாறே அவர் தனிமைப் படுத்துக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அம்பத்தூர் திமுக வேட்பாளர் சாமுவேல், காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச் நாஜிம், பாஜக அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.