திருமணமான தன் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை கத்தியால் குத்திய தந்தை கைது

15 October 2020

திருமணமான தன் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை போத்தனூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 48). செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வீராச்சாமி(வயது24) என்பவர் செல்வகுமாரின் மகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். காதல் தொல்லையும் கொடுத்ததாக தெரிகிறது.  ஆனால், அந்த பெண் காதலை ஏற்க மறுத்தார். தொடர்ந்து,  வீராசாமி, அந்த பெண்ணின் தந்தை செல்வகுமாரிடத்தில் சென்று பெண்கேட்டுள்ளார் . ஆனால், செல்வகுமார் மறுப்பு தெரிவித்ததோடு, வேறொருவருக்கு தன்  திருமணம் செய்து வைத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி அந்த பெண்ணின் வீட்டு முகவரியை தெரிந்து கொண்டு அங்கே  சென்றும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தந்தை செல்வகுமாரிடத்தில் கூறி அழுதுள்ளார். இந்த நிலையில் , இன்று செட்டிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வீராசாமியிடம் செல்வகுமார் தன் மகளிடம் தகராறு செய்வது தொடர்பாக தட்டிக் கேட்டுள்ளார். இதனால் , இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வகுமார், தான்  வைத்திருந்த கத்தியால் வீராச்சாமியை கழுத்து மற்றும் கை பகுதிகளில் சரமாரியாக வெட்டினார்.

இது குறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீஸார் செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.