உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக
தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 இல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வெற்றியை சுவைக்க பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இவர்களில் மிகவும்
எதிர்பார்ப்புக்குரியவராக அகிலேஷ் யாதவ் பார்க்கப்படுகிறார். இதற்கு காரணம்
அவருடைய சமீபத்திய செயல்பாடுகள்தான். யாதவர் அல்லாத சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையையும்
ஆதரவையும் பெற்று வரும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அது போல் தேர்தல்
அறிக்கையிலும் ஏழைகளுக்கு 300 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஊதியமாக ரூ 1500 வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய
பெண்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 6000-த்தை ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி
வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை, சிறுபான்மையினர் மீதான
வன்கொடுமை, உன்னவ் பாலியல் பலாத்காரம், ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் பாஜகவுக்கு இந்த தேர்தலில்
மைனஸாக உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மற்ற கட்சிகள் பயன்படுத்திக் கொள்ளப்
பார்க்கிறது. எனவே இந்த தேர்தலில் பாஜக அல்லாது மற்ற கட்சிகள் வெல்ல வேண்டும் என
நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் உ.பி.
மாநில தேர்தல் குறித்து புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் தமிழக
சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகி இளங்கோ பேசுகையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி
வைத்தால் நாங்கள் நிச்சயம் தோற்று போவோம். இதனால் நிறைய பின்விளைவுகள் உள்ளன. 2017 ஆம் ஆண்டு நடந்த
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக எந்த நிலையை மேற்கொண்டதோ அதே
நிலையைத்தான் எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த தேர்தலுக்கு மேற்கொண்டு
வருகிறார். கடந்த முறை மத்திய
அமைச்சராக இருக்கும் அமித்ஷா, யாதவர்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்தார்.
அகிலேஷ் யாதவும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை ஒருங்கிணைத்து இன்று மிகப் பெரிய
சக்தியாக உருவாகிவிட்டார். இதனால்தான் எங்களுடைய வெற்றியை காங்கிரஸுடனோ பகுஜன்
சமாஜ் கூட்டணியுடனோ கூட்டணி வைக்காததால் பாதிக்காது. நிச்சயமாக எங்களுடைய
வெற்றி உறுதி. அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும்
இல்லை. அபர்னா இன்று நேற்று இணையவில்லை. அவர் தொடர்ந்து இரு ஆண்டுகளாக
பாஜகவுடன்தான் பேச்சுவார்த்தையில் இருந்தார். தொடர்ந்து மோடிக்கு ஆதரவாகவும்
அகிலேஷ் யாதவிற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வந்தார். போன முறை காங்கிரஸுடன்
கூட்டணி வைத்து நாங்கள் அனுபவித்துவிட்டோம். எனவே எந்த காலத்திலும் காங்கிரஸுடன்
சமாஜ்வாதி கூட்டணி வைக்காது. வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக மம்தா
பானர்ஜி உ.பி.க்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இந்த உத்தரப்பிரதேச அரசியல்
தேசிய அரசியலை ஒட்டி உள்ளது. எனவே நான் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையாக கேட்கிறேன், அவரும் உத்தரப்பிரதேசம் சென்று அகிலேஷ்
யாதவிற்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரதமர் மோடி என்ற பிம்பத்தை உடைத்து தேசிய
அரசியலில் மிகப் பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு உத்தரப்பிரதேச தேர்தல் களம்
உதவியாக இருக்கும் என்றார் இளங்கோ.
நீட் தேர்விலிருந்து விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, கொரோனா நிவாரண நிதி, ஜிஎஸ்டி, வெள்ள நிவாரணம்
உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
நிலையில் முதல்வர் ஸ்டாலின், உ.பி. சென்று அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும்
பிரச்சாரம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக
காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல், திமுக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவை ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றன. வரும் 2024 ஆம் ஆண்டு
நாடாளுமன்றத் தேர்தலில் இவை பாஜகவின் வெற்றியை தடுக்கும் விதத்தில் வியூகம்
அமைக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோடியாக உள்ள
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக
பார்க்கப்படுகிறது. காரணம் பெரிய சட்டசபை தொகுதி, இன்னொன்று இந்த தேர்தலில் வெற்றி பெறும்
கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பதுதான். எனவே பாஜக அல்லாத ஒருவர் உ.பி
தேர்தலில் வெற்றி பெற்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சியை
வீழ்த்திவிடலாம் என்பது எதிர்க்கட்சிகளின் கணக்கு. இது எந்த விதத்தில் பயனளிக்கும்
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.