இயேசு பூமியில் அவதரித்து வாழ்ந்த காலம் முழுவதும் மனத்தாழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். எல்லாப் புகழையும் தமது வானுலகத் தந்தைக்கே அர்ப்பணித்தார். இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவர் செய்த அற்புதங்களைப் பார்த்து, அவருடைய நற்குணங்களைக் கண்டு, மக்கள் அவரைப் புகழ்ந்தார்கள். ஆனால், அந்தப் புகழை இயேசு ஒருபோதும் தன்னுடையது என்று கருதவில்லை. அனைத்தையும் தனது தலையில் அவர் ஏற்றிக்கொள்ளவில்லை, பரலோகத் தந்தைக்கே சமர்ப்பித்தார்.
இயேசு மனத்தாழ்மையின் முன்மாதிரியாக விளங்கினாலும் அவர் ஒருபோதும் கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை. மனிதர்களைக் கண்டு அஞ்சவும்இல்லை. அதேபோல, இயேசு ஒருபோதும் வீராப்புடன் நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடும் அன்போடும் கனிவோடும் நடந்துகொண்டார்.