எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

19 July 2021


எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, நாடாளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, புதிதாக நியமிக்கப்பட்ட கேபினட் அமைச்சர்களை அறிமுகப்படுத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடியை அழைத்தார். இதனையடுத்து பிரதமர் பேசத் தொடங்கிய போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரஃபேல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை, அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை தொடங்கிய பின், உயிரிழந்த எம்.பிக்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை மீண்டும் தொடங்கியபோது, அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கையை எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டனர்.
அப்போது, நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.




இதனையடுத்து மீண்டும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என குறிப்பிட்டார். அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்த பிரதமர், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 கோடி மக்களும் ‘பாகுபலி’ என்றும் குறிப்பிட்டார்.