ஆலங்குளம் அருகே மகளை காப்பாற்ற முயன்ற தாய் பலி!

18 June 2022


ஆலங்குளம் அருகே மாறாந்தையை சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு மனிஷா(14),அபிஷா(10) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.நிறைகுளத்தான் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்த நிலையில் வசந்தி தனது இரு மகள்களையும் கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று வசந்தி தனது மூத்த மகளான மனிஷாவுடன் மாட்டுத்தொழுவிற்கு சென்றுள்ளார்.அப்போது அருகில் இருந்த  மின்கம்ப கம்பியினை மனிஷா தொட்டுள்ளார். அப்போது அதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மனிஷா உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட வசந்தி தனது மகளை காப்பாற்ற ஓடி மகளை தள்ளி விட்டுள்ளார். அப்போது வசந்தியின் மேலும் மின்சாரம் பாய்ந்ததில் அதில் இருந்து விடுபட முடியாமல் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு வசந்தியை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுக்குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து வசந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் மகளை காப்பாற்ற முயன்ற தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.