உலகம் சுற்றும் வாலிபன் படத்தை காண தியேட்டரில் குவிந்தனர்.

06 September 2021

புது திரைப்படங்களுக்கு இணையாக எம்ஜிஆரின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை காண தியேட்டரில் குவிந்தனர்.

கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது படிப்படியாக நோய்தொற்று குறைந்ததால் கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளையும் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தி முதல் புதுபடங்கள் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பழைய திரைப்படங்களை தற்போது ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமையான நேற்று மதுரையில் முக்கிய பழம்பெரும் திரையரங்கமான அமிர்தம் திரையரங்கில் எம்ஜிஆர் நடிப்பில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது.

அதனை எம்ஜிஆர் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும் எம்ஜிஆரின் பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்ததும், எம்ஜிஆர் வாழ்க என கோஷங்களை எழுப்பினர். அதோடு; விஜய், அஜித் படங்களை அவரவது ரசிகர்கள் கொண்டாடுவது போல எம்ஜிஆர் ரசிகர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை கொண்டாடினர்.

இதனிடையே, விருதுநகரில் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுக சார்பாக இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் பெண்கள் என படத்தை காண திரையரங்கம் முன்பு குவிந்தனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 600 ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காரணத்தால் ஏராளமான பொதுமக்கள் இலவச டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

எம்ஜிஆர் மறைந்து 35 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது திரைப்படத்தை திரையில் காண ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரையரங்கு முன்பு கூடியது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது