மெட்ரோ ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் - மேலாண்மை இயக்குனர்

20 June 2022

மாற்றுத்திறன் கொண்டவர்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தயாராக உள்ளது என்கிறார் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்.

சென்னை உலக 'மன இறுக்கம் பெருமை' தினத்தையொட்டி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் யங் இந்தியன்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, 5 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த 215 மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் 15 தன்னார்வலர்கள் சென்னை செனாய் நகரில் இருந்து விமான நிலையம் நோக்கி பயணம் செய்ய தயாராக இருந்தனர். இதனை அறிந்த மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக், அந்த குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'மாற்றுத்திறன் கொண்டவர்கள் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும்போது அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தயாராக உள்ளது' என்றார். இந்த பயணத்தின் போது, மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (திட்டங்கள்) டி.அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் (ரெயில் பராமரிப்பு மற்றும் இயக்கம்) எஸ்.சதீஸ்பாபு உள்பட பலர் இருந்தனர்.