தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று

06 October 2021

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக வாக்குச் சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 9 மாவட்டங்களில் 80ஆயிரத்து 819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத் தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் வாக்குப்பதிவுக்காக சுமார் 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்ட வாக்குப்பதிவு 7 ஆயிரத்து 921 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில், வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 130 காவல்துறையினரும், 3,405 ஊர்காவல்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.