10, பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடு; முழு விவரம்

20 June 2022

10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முழு விவரம் வருமாறு சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கூறியதாவது:- 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் 2ந் தேதிமுதல் மறு தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்பு தமிழகத்தில் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர். இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998, கிட்டத்தட்ட 93.76 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள், 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 - 96.32 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 - 90.96 சதவீதம். மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது.

இயற்பியல் பாடத்தில் 634 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், உயிரியல் பாடத்தில் 1541 பேரும், கணிதப் பாடத்தில் 1858 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தாவரவியல் பாடத்தில் 47 பேரும், விலங்கியல் பாடத்தில் 22 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 3827 பேரும், வணிகவியல் பாடத்தில் அதிகபட்சமாக 4634 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

மேலும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 4540 பேரும், பொருளியல் பாடத்தில் 1146 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2816 பேரும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 1151 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களில், கோயம்பத்தூர், மதுரை, தூத்துக்குடி நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. உதாரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் 83% மக்கள் கிராமப்புற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

முதல் 10 மாவட்டங்களில், ராமநாதபுரம், மதுரை நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களிலும் பாலின விகிதம் சமமாகவும், கூடுதலாகவும் உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1023 பெண்கள் உள்ளார்.