காற்றாலை பிரச்சினையில் விவசாயி தற்கொலை : உறவினர்கள் போராட்டம்!
09 December 2025
ஓட்டப்பிடாரம் அருகே தனியார் காற்றாலை நிலம் எடுப்பதில் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சன்னாசி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் ஆழ்வார்சாமி (70). விவசாயி. 2-வது மனைவியின் மகள் சுப்புலட்சுமி. இந்த நிலையில் பூவாணி கிராமத்தில் சன்னாசியின் பெயரில் உள்ள 3.5 ஏக்கர் நிலத்தில், ஆழ்வார்சாமி உளுந்து, நெல் சாகுபடி செய்தும், ரோஜா தோட்டம் அமைத்தும் உள்ளார்.
சன்னாசி 2013-ம் ஆண்டு எழுதிக்கொடுத்த உயில் அடிப்படையில் அவரது 2-வது மனைவியின் மகள் சுப்புலட்சுமி இந்த தோட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். இதனால் தனியார் காற்றாலை நிறுவன மேலாளர்கள் சுகுமார், பாண்டியராஜன் உள்பட 15 பேர் வந்து பொக்லைன் மூலம் தோட்டத்தில் உள்ள ரோஜா செடிகளை அப்புறப்படுத்தினர்.
இதையறிந்த ஆழ்வார்சாமி மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காற்றாலை நிறுவன ஊழியர்கள் சாதி பெயரைச் சொல்லி தன்னையும், தனது மகன்களையும் அடித்ததாக கூறி ஆழ்வார்சாமி பூச்சிக்கொல்லியை (விஷம்) குடித்தார். உடனே அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் கடந்த 5-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், காற்றாலை நிறுவன மேலாளர்கள் சுகுமார், பாண்டியராஜன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் அவர்கள் இருவர் உள்பட சிலர் மீது தீண்டாமை சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்களை கைது செய்யும் வரை ஆழ்வார்சாமியின் உடலை வாங்க மாட்டோம் என 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தனியார் காற்றாலை நிறுவன மேலாளர் சுகுமாரும் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் அடிப்படையில் புளியம்பட்டி போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொற்றவை செய்தியாளர்
S.முகேஷ் குமார்
ஓட்டப்பிடாரம்.