சாலையில் சென்ற கார், திடீரென தீப்பிடித்து எரிந்த பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

26 October 2020

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மேம்பாலம் பகுதியில் சாலையில் சென்ற கார், திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வில்ஃப்ரெட் ஜோ. இவர், தனது மனைவி ஷைனி மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று காலை பெங்களூருவில் இருந்து கார் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அஞ்சலி ரவுண்டானா

மேம்பாலத்தில் சென்றபோது, காரில் இருந்து திடீரென கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட வில்ஃப்ரெட் ஜோ மற்றும் குடும்பத்தினர், உடனடியாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, காரில் இருந்து வெளிவந்துள்ளனர்.

அப்போது என்ஜின் பகுதியில் திடீரென பற்றிய தீயானது, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.