புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காகித கப்பல் விடும் போராட்டம்

02 December 2020

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கையில் காகித கப்பலை செய்து ஏரியில் விட்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடையே விவசாயிகள் கூறுகையில்,
அண்மையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இது முற்றிலும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. மேலும் பதுக்கலுக்கும் கள்ளச்சந்தையை ஊக்குவிக்கவும் கார்ப்பரேட் கம்பெனிகளை விவசாயத்தில் கொல்லைப்புற வழியாக கொண்டு வந்து இறக்கி விவசாயத்தை இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி வருங்கால தலைமுறையினரை அழிக்கவல்ல திட்டமாகும்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை வழங்கி இந்திய விவசாய விளைபொருட்களை உள்நாட்டு தேவை போக மீதமுள்ளதை கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதன் மூலம் நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

அதே போல விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை கொண்டு விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் போது இடுபொருட்களின் செலவு விதைகளின் செலவு களை மேலாண்மை செலவு நீர் பயன்படுத்தும் அளவு கூலியாட்களின் தேவை குறையும் கால்நடைகளுக்கும் சத்தான இயற்கை உரங்களை பயன்படுத்தி நல்ல தரமான தீவனங்களை உற்பத்தி செய்து தர முடியும். இவ்வாறு மனிதன் மற்றும் கால்நடைகளுக்கும் எந்தவித நோயின்றி ஆரோக்கியமாக வழிவகுக்கும்.

இதனையெல்லாம் நடைமுறைப்படுத்தாத மத்திய அரசு விவசாயிகளை திசை திருப்ப வெறுமனே காகிதத்தில் சட்டம் இயற்றி விவசாயிகளை வஞ்சிப்பது ஆரோக்கியமான போக்கு இல்லை என்பதனை வலியுறுத்தி கோரிக்கைகளை காகிதத்தில் கப்பல் செய்து விடும் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

மேலும் அறவழியில் போராடும் தமிழக விவசாயிகளை தீவிரவாதிகளை போல காவல்துறையை மத்திய அரசு ஏவிவிட்டு லத்தியால் அடிப்பதும் வன்மையாக கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். சேனாபதி கிராம விவசாய சங்க நிர்வாகிகள் கனகராஜ் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு சேனாபதி ஏரியில் காகிதத்தில் செய்த கப்பல் விட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

செய்தியாளர் : கார்த்தி