சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு கத்திக் குத்து

21 May 2022

ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டிருந்த பெண்களுக்கு கத்திக் குத்து ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் மேலும் ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியை சேர்ந்த யாசகம் எடுக்கும் சில பெண்கள் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.


அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் படுத்துறங்கிய பெண்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கௌசர் (வயது27) என்ற பெண் மற்றும் தனம் (வயது29) என்ற பெண்கள் ரத்த வெள்ளத்தில் மீட்ட உடனிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர்.


அங்கு சிகிச்சை பலனின்றி கௌசர் என்ற பெண் உயிரிழந்தார், படுகாயமடைந்த தனம் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பதும் மூன்று மாதங்களுக்கு முன்பு தனம் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு சில நாட்கள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தேவேந்திரனை விட்டு தனம் பிரிந்து ஆம்பூர் வந்துள்ளதாக தெரிகிறது.


இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் தனத்தை தேடி நேற்று நள்ளிரவு ஆம்பூர் பகுதியிற்கு வந்து சாலையின் ஓரம் உறங்கிக் கொண்டிருந்த தனத்தை கத்தியால் குத்திய போது அதை தடுக்க வந்த கௌசர் என்ற பெண்ணிற்கு தவறுதலாக தொண்டை பகுதியில் கத்தி குத்தப்பட்ட நிலையில் கௌசர் உயிரிழந்திருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


மேலும் கௌசரின் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கத்தியால் குத்திய தேவேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


ஆம்பூரில் சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது கத்தியால் குத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த கௌசருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.