திருவாரூர் அருகே கஜா புயலில் சேதமாகி இடிந்து‌ விழுந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

11 August 2021


திருவாரூர் அருகே கஜா புயலில் சேதமாகி இடிந்து விழுந்த அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள், குழந்தைகள் நலன் கருதி பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் கஜா புயலின் போது மரங்கள் முறிந்து சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதனால், சாலையோரத்தில் உள்ள சுவர் மற்றும் பள்ளியின் உட்புறத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்து சேதமானது.

இதனால் பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிருபர் மீனா திருவாரூர்