ரூ.8 கோடி மதிப்பில் மன்னர் திருமலை நாயக்கர் மஹால் புதுப்பிப்பு - அமைச்சர் தங்கம்தென்ன ரசு தகவல் !

12 June 2021




 தமிழக மக்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் வகையில் தமிழகத்தில் ஏராளமான புராதான சின்னங்கள், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் தென் தமிழகத்தில் முக்கியமான ஒன்றாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் உள்ளது. தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை தமிழ் சமுதாயம் மட்டுமன்றி உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை புதுப்பிக்கும் பணியில் தமிழக அரசு முன்வந்துள்ளது.
 மன்னர் திருமலை நாயக்கர் மகாலை ரூ.8 கோடி மதிப்பில் மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நமது வரலாற்று சின்னங்களை நாகரீகம் பழமை மாறாமல் அதனை புதுப்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. மன்னர் திருமலை நாயக்கர் மஹால் பல்வேறு கால சூழ்நிலைகளையும் தாங்கி நின்று நமது தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பறைசாற்றி வருகிறது.
 தற்போது திருமலை நாயக்கர் மஹால் ரூ.8 கோடி மதிப்பில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பழமை மாறாமல் ஒளி-ஒலி காட்சி இடம்பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கற்சிற்பங்கள், கல்வெட்டுகள் மூலம் நமது கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகால் புதுப்பிக்கும் பணி 3 கட்டமாக பணிகள் துவங்க உள்ளன. முதல்கட்டமாக வெளியில் உள்ள பூங்கா புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு நூலகம் அமைக்கப்படுகிறது என்றார்.

ஒன்றிய அரசு தமிழை தொடர்ந்து புறக்கணிக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்;
 பழமையும். தொன்மையும் கொண்ட மொழி தமிழ். தமிழ், தமிழனை யாராலும் புறக்கணிக்கவோ, அழிக்கவோ முடியாது. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக்களை எழுதும் பழக்கத்தையும், கற்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். உலகளவில் நாகரீகம் கொண்ட மனிதனாக தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழையும் தமிழரையும் யாராலும் புறக்கணிக்க முடியாது.
 தென் மாவட்டங்கள் தமிழகத்தில் வளர்ச்சி பெறாமல் உள்ளதே: 
 தென் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணியும் இல்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது மதுரை தூத்துக்குடி பெருவழி காரிடார் தொழில் பூங்கா அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சியில் இருந்த அரசு இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் கொண்டு வரவில்லை. அதனால் தென் தமிழகம் வளர்ச்சி பெறாமல் உள்ளது. சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய தொழில் கொள்கையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தென் தமிழகம் வளர்ச்சி பெறும். இதனை கருத்தில் கொண்டு புதிய தொழிற்சாலைகளை தென் தமிழகத்தில் அமைக்க இந்த அரசு தொழில் முனைவோருடன் கலந்து பேசி வருவதாக தெரிவித்தார்.
 ஆய்வின் போது மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், தளபதி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.