பெண்களின் தாலி அறுத்த பேரறிவாளனுக்கு திருமணமா? - ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சாட்சி

21 May 2022

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து, ஆளுநருக்கும் கண்டனம் தெரிவித்தது.


தூக்கு மேடையிலிருந்து சுதந்திர காற்று சுவாசிக்க வந்திருக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழ்நாடு முழுக்க வரவேற்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பேரறிவாளனுக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்கும் எனவும் கூறியிருந்தார்.இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி அனுசியாவை ஜீ தமிழ் சார்பாக சந்தித்தோம். அப்போது பேசிய அவர், "இந்தத் தீர்ப்பு அநீதியானது. அந்தச் சம்பவத்தில் எங்கள் வாழ்க்கையை தொலைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


வெடிகுண்டின் பெலட் என்னும் துகள்களை இன்னமும் என் உடலில் இருந்து எடுக்க முடியவில்லை.பேரறிவாளனை முதல்வர் அழைத்து வாழ்த்துகிறார் ஏன் அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்து வாழ்த்த வேண்டியதுதானே.


கோவை குண்டு வெடிப்பில் விசாரணை கைதிகளாக 20ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை ஏன் விடுதலை செய்யவில்லை. பேரறிவாளனுக்கு ஒரு நியாயம் முஸ்லீம்களுக்கு ஒரு நியாயமா?பேரறிவாளனுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுமென அவரது தாயார் கூறுகிறார். எங்களைப் போன்ற பல பெண்களின் தாலியை அறுத்தவருக்கு கல்யாணமா. அவருடைய அம்மாவுக்கு மனசாட்சி வேண்டாமா.


யாரொல்லாம் பேரறிவாளனின் வெற்றியை கொண்டாடுகிறார்களே அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் பணம் பெற்றுக்கொண்டவர்கள். இரண்டு திராவிட கட்சிகளும் பாதிக்கப்பட்ட எங்களை இதுவரைக்கு கண்டுகொள்ளவேயில்லை" என குற்றஞ்சாட்டினார்.மேலும் பேரறிவாளன் எதுவும் அறியாதவர் என்ற பேச்சு இருக்கிறதே என்ற கேள்விக்கு, ரோட்டில் செல்பவர்கள் யார் கேட்டாலும் பேட்டரி வாங்கிகொடுப்பாரா என கேள்வி எழுப்பினார்.