இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

02 April 2021

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (வயது 28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம்.  கொரோனா பாதிப்பு எனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.

என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.  அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.  பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
இந்த மாத தொடக்கத்தில் பன்சாலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒரு சில வாரங்களில் குணமடைந்து சென்றார்.  ஆலியாவின் காதலரான நடிகர் ரன்பீர் கபூர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அவர் சிகிச்சை பெறும் காலத்தில், ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டேன் என்றும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்