வந்தது கல்லணை தண்ணீர் விவசாய பணிகள் தீவிரம்

18 June 2020

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4 நாட்களுக்குப்பிறகு நேற்று முன்தினம்(16-ந் தேதி) காலை கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து அன்று மதியம் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரியில் 3015 கன அடியும், வெண்ணாற்றில் 3005 கன அடியும், கல்லணைக்கால்வாயில் 700 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை திருக்காட்டுப்பள்ளியை கடந்து சென்றது. இதேபோல் வெண்ணாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூதலூரை கடந்து நேற்று மதியம் தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியை வந்தடைந்தது. குடமுருட்டி ஆற்றிலும் நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

3.15 லட்சம் ஏக்கர்

கல்லணைக்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஆலக்குடிக்கு அருகே வந்தது. கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 77 ஆயிரத்து 500 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரும் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் முன்பட்ட குறுவை 1 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளன. ஆற்று நீரை நம்பி உள்ள பாசன பகுதிகளில் தற்போது விவசாய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சாகுபடி பணிகள் தீவிரம்

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையிலும், திருவையாறு பகுதிகளிலும், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, கள்ளப்பெரம்பூர், சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, காட்டூர் பகுதிகளில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதேபோல் நாகை செல்லும் சாலையில் உள்ள மாயரிம்மன்கோவில் பகுதிகளிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறுவை சாகுடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாற்றங்கால் தயார் செய்வது, நடவுப்பணிகளுக்கு வயல்களை தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சில விவசாயிகள், விலைக்கு நாற்றுகளை வாங்கியும் நடவுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 8 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது வாய்க்கால், ஆறுகளில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான பயிர்க்கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பயிர்க்கடனும் வழங்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் விவசாய பணிகளையும் தைரியமாக தொடங்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.