பாண்டியர்கள் வீழ்ச்சி

பாண்டிய வேந்தனான குலசேகர பாண்டியனுக்கு சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள். வீரபாண்டியன் தாதிக்குப் பிறந்தவன்.
தந்தை ஆட்சி புரியும் காலம் தொட்டே இருவரும் இளவரசர்களாக ஆட்சி புரிந்தனர்.  வீரபாண்டியன் கி.பி. 1296 - 97 ல் இளவரசுப் பட்டம் எய்தினான். அதற்கு அய்ந்தாறு வருடங்களுக்குப் பிறகு கி.பி. 1303 ல் சுந்தரபாண்டியன் பட்டம் ஏற்றான். அரசுரிமைக்காக இவ்விருவருக்கும் மூண்ட பொறாமையும், பகையும் பாண்டிய நாட்டின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

"வீரபாண்டியனின்  திறமையையும், வீரத்தையும் கண்டு அவனே தனக்குப் பின் அரசனாக வேண்டும் என மன்னர் குலசேகரன் பணித்தான். இதனால் வெகுண்ட சுந்தரபாண்டியன் தந்தையை கொலை செய்து விட்டு மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். இது நடந்தது கி.பி.1310ல் . சகோதர யுத்தம் ஆரம்பமாயிற்று. வீரபாண்டியனுக்கு ஆதரவாக குலசேகரத் தேவரின் மகள் வயிற்றுப் பேரனும் கருர் பகுதிக்குத் தலைவனுமான "மானர் பெருமான் " உதவி புரிந்தான். சுந்தர பாண்டியனோ டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் தஞ்சம் புகுந்தான். வீரபாண்டியன் பாண்டியர் அரியணை ஏறினான். 

சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான். அப்போது கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் தென்னக அரசுகளை சூறையாடிக் கொண்டிருந்தான்.

மாலிக் கபூருக்கு தமிழகத்தின் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்றும், சுந்தரபாண்டியனுக்கு ஆதரவாகத்தான்,
அவன் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தான்.
ஆனால், மாலிக் கபூர் தமிழகத்திற்குள் வருவதற்குள் ஹொய்சாள மன்னன்
வள்ளால தேவனின் முயற்சியால் பாண்டிய சகோதரர்களுக்குள்
சமாதானம் ஏற்பட்டு, வீரபாண்டியன் சோழ நாட்டில்
வீரத்தலவாய்புரத்தை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்து வந்தான்; சுந்தரபாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான்.
மாலிக் கபூரிடம் தோற்ற வள்ளால தேவன், அவனது கட்டளையின் பேரில், மாலிக் கபூரின் படை பாண்டியர்களின் ராஜ்ஜியத்திற்குள்
நுழைவதற்கு வழிகாட்டினான். வீரபாண்டியன் நேரடியாகப் போர் புரியாமல், கோட்டையைப் பூட்டிக்கொண்டு, சுல்தான் படைகளின்மீது ஆங்காங்கு திடீர் தாக்குதல்கள் புரிந்தான். இதனால் மாலிக் கபூர்
அதிக வெறுப்புக்கு ஆளானான்.  
வீரத்தலவாய்புரம் சுல்தான்
படையினரிடம் வீழ்ந்தது. ஆனால் வீரபாண்டியன் தப்பித்து ஓடிவிட்டான். 

மாலிக் கபூர் தன் படையை காஞ்சிபுரத்திற்குத் திருப்பி,
அங்குள்ள கோயில்களையெல்லாம் தரைமட்டமாக ஆக்கினான்.
சிதம்பரமும், மாலிக் கபூர் படையின் தாக்குதலுக்கு உள்ளானது. அங்குள்ள கோயில்களில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன.
செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன, பின்னர் மாலிக் கபூர் தன்
கவனத்தை மதுரைப்பக்கம் திருப்பினான். வீரபாண்டியன், சுந்தரபாண்டியனுடன் சேர்ந்துவிட்டான். இப்போது
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு, சுல்தான் படையை எதிர்க்கத் தீர்மானித்தனர். சுந்தரபாண்டியன், தன் படையைத் திரட்டிக் கொண்டு மாலிக் கபூரை எதிர்நோக்கிச் செல்ல தீர்மானித்தான். ஆனால் வீரபாண்டியனோ மதுரையிலிருந்து
கொண்டே தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று வலியுறுத்தினான். முடிவில், சுந்தரபாண்டியன் சுல்தான் படையை
எதிர் நோக்கிச் செல்ல வேண்டும், வீரபாண்டியன் மதுரையில் இருந்து
கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சகோதரர்கள் இருவரும் முடிவுக்கு வந்தனர். ஆனால் இம்முறையும் நிலைமை
மாலிக் கபூருக்குச் சாதகமாகவே இருந்தது.
மேலைத் திருக்காட்டுப்பள்ளி வரை, சுந்தரபாண்டியனின் படை வெற்றிகரமாக வந்தது. கோடை காலமாக இருந்ததால் போர் வீரர்களின் தண்ணீர்த் தேவை அதிகரித்தது. துரதிர்ஷ்ட வசமாக
வழக்கத்துக்கு மாறாக காவிரி நதியில் தண்ணீர் இல்லை.
நிலைமையை முன்கூட்டியே அறிந்த மாலிக் கபூர் படையினர்
தண்ணீரைப் பக்குவமாகப் பயன்படுத்தினர். தண்ணீரைத் தேடி
சுந்தரபாண்டியனின் படை, இலக்கை விட்டு மேற்குப் பக்கமாக காவிரிக் கரையோரம் சென்றது. இதனால் பாண்டியப் படைகளின் வேகமும் குறைந்தது. மாலிக் கபூரின் படை சுந்தரபாண்டியனின்
படையை திருச்சிராப்பள்ளியில் எதிர்கொண்டது. ஏற்கனவே
சோர்வுக்கும் உளைச்சலுக்கும் ஆளான பாண்டியப் படையினரால்,
சுல்தானியப் படையை எதிர்கொள்ள முடியவில்லை. பாண்டியர்
படை வீழ்ந்தது. சுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டான்.

சுந்தரபாண்டியனைத் தவிர மற்ற படைவீரர்கள் மற்றும் தளபதிகளின் தலை துண்டிக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளியிலும், திருவரங்கத்திலும்
உள்ள கோயில்கள் சூறையாடப்பட்டன. அங்குள்ள செல்வங்கள்
கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் திருவரங்க கோயிலிலிருந்து
ரெங்கநாதர் மூலவர் சிலையை மாலிக் கபூர் படை தூக்கிச் சென்றது.
சுந்தரபாண்டியனின் படை நிர்மூலமானதால், மாலிக் கபூரின் பெரும்படையை எதிர்நோக்க முடியும் என்று மதுரையிலிருந்த
வீரபாண்டியனுக்குத் தோன்றவில்லை, எனவே அவன் பெண்களையும் குழந்தைகளையும் மதுரையிலிருந்து மலையாள
தேசத்திற்கு பாதுகாப்பாக அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டான், எதிர்பார்த்தது போல் மாலிக் கபூரின் படை மதுரையை முற்றுகையிட்டது.
மாலிக்காபூர் படை  மதுரையை சூறையாடியது. மாலிக் கபூர் மதுரையில் நுழைந்தவுடன் பாண்டிய அரசன் வீரபாண்டியன் தன் பரிவாரங்களோடு ஓடி விட்டான் என்று ஜியாவுதீன் பார்னி குறிப்பிடுகிறார்.

ஆனால் மாலிக் கபூர் எதிர்பார்க்காத விதமாக,
சுந்தரபாண்டியனின் மாமா விக்கிரம பாண்டியன் மறவர் படைகளைக் கொண்டு மாலிக் கபூர் படையினர் மீது திடீர் தாக்குதல்கள் நடத்தி
பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு
மாலிக் கபூரால் முற்றுகையைத் தொடர முடியவில்லை. அதனால்
வீரபாண்டியனுடன் மாலிக் கபூர் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தான்.
ஒப்பந்தத்தின்படி,

1. மதுரை மீனாட்சியம்மன் கோயில் இடிக்கப்படாமல் இருக்க,
அக்கோயிலுக்கு சொந்தமான 9000 மொடக்கு
பொற்காசுகளையும், விலைமதிக்க முடியாத
நவத்தினங்களையும் சுல்தானுக்குத் தர வேண்டும்.

2. மதுரையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் உணவுப்
பொருட்களில் பாதியை சுல்தானியப் படையினருக்கு கொடுக்க வேண்டும்.

3. பாண்டியர்கள் வசமிருக்கும் யானைகளும்,குதிரைகளும் சுல்தான் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதற்குப் பிரதிபலனாக மாலிக் கபூர் வசம் சிறைப்படுத்தப்பட்டிருந்த
சுந்தரபாண்டியன் விடுதலை செய்யப்படுவான். மேலும் மதுரை கோயிலில் உள்ள மீனாட்சி அம்மாளுக்கும் சொக்கனாதருக்கும் எந்த
பாதிப்பும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை மாலிக் கபூர் அளித்தான்.

மாலிக் கபூர் மதுரை மீது படையெடுப்பு நிகழ்த்திய வருடம் கி.பி.1311ம் ஆண்டு. ஏகப்பட்ட செல்வங்களும், 612
யானைகளுடனும், 20,000 குதிரைகளுடனும் மாலிக் கபூர் படை மதுரையை விட்டு டெல்லிக்குப் புறப்பட்டது.
மாலிக் கபூர் படை மதுரையை விட்டுச் சென்ற பின் பாண்டிய
சகோதரர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் சண்டை
ஏற்பட்டது.  மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் போட்டி போட்டுக் கொண்டு சிறிது காலம் ஆண்டனர். பாண்டிய நாட்டில் எங்கும் குழப்பம் மலிந்திருந்தது. 

இந்த  நிலையைப் பயன்படுத்திக் கொண்டு திருவாங்கூர் பகுதியை ஆண்டு வந்த சேரமன்னன் இரவிவர்மன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினான். இது நடந்தது கி.பி. 1311-12 ல் . இரவிவர்மன் தனது படைகளுடன்  வடக்கே காஞ்சி வரை சென்றான். வேகவதி ஆற்றில் இரண்டாம் முறையாக சேரன் முடிசூட்டு விழா நடத்தியதை வரதராஜ சுவாமி கல்வெட்டு ஒன்று கூறுகிறது. தொண்டை மண்டலம் வரை பரவியிருந்த பாண்டியர் ஆதிக்கம் சேரனால் ஒடுக்கப்பட்டது. சென்னைக்கருகிலுள்ள பூவிருந்தவல்லி பெருமாள் கோவிலில் பாண்டியரது கயல்கள் மீது சேரனின் அங்குசம் பாய்வது போன்ற சிற்பம் இன்றும்  உள்ளது.

பிறகு சேரனை வீழ்த்தி இந்தப் பகுதியை காகதீய அரசன் பிரதாபருத்ரன் கைப்பற்றினான். அடுத்தடுத்த வந்த தோல்விகளினால் பாண்டியர் ஆதிக்கம் ஆட்டம் கண்டது. காஞ்சிப் பகுதியை பாண்டியர் இழந்தனர்.  ஆங்காங்கே சிற்றரசர்கள் சுயத்தன்மை பெறத் தொடங்கினர். வட ஆர்க்காடு பகுதியில் சம்புவராயர்களும், தென்னார்க்காடு பகுதியில் சேதிராயரும், பாண்டிய நாட்டில் சில பகுதிகளில் வாணாதிராயர்களும் சிற்றரசர்களாக சுயேட்சையாக இயங்கத் தொடங்கினர். 

இச் சூழ்நிலையில் தென்னிந்தியாவில் மேலும் இரு முகமதியப் படையெடுப்புகள் நடந்தன. கி.பி. 1319 ல் குஸ்ரோ கான் படையெடுப்பு . கி.பி. 1323ல் முகமது பின் துக்ளக் என்றழைக்கப்பட்ட  உலுக்கான்  படையெடுப்பு . உலுக்கான் மதுரையை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவன் தான் பாண்டிய அரசனை வென்று டில்லி சுல்தான்களின் ஆட்சியை முதன் முதலில்  1323ல் நிறுவினான். பாண்டிய நாடு துக்ளக் இராச்சியத்தின் 23 மாகாணங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது.  சில ஆண்டுகளுக்குப் பிறகு டில்லி சுல்தான் தொடர்பை அகற்றிவிட்டு ஜலாலுதீன் ஆசன்ஷா தன்னை மதுரை சுல்தானா க பிரகடனப்படுத்திக் கொண்டான். மதுரையில் சுல்தான்கள் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1335 முதல் 1378 வரை மாபார் சுல்தான்கள் ஆண்டனர்.  ஜலாலுதீனுக்குப் பிறகு அலாவுதீன் உடாஜி, குதுபுதீன், கியாசுதீன், நாசிருதீன், அடில்ஷா, பக்ருதீன் முபாரக்ஷா, அலாவுதீன்  சிக்கந்தர்ஷா போன்றோர் மதுரை சுல்தான்களாக அரசாண்டனர். 

தொகுப்பாக 

1. மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் மகனான சுந்தரபாண்டியனால் கொலை செய்யப்படுகிறான்.

2. சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் அரசரிமைப் போர் ஏற்படுகிறது.

3. வீரபாண்டியனின் ஆட்சிக்கெதிராக டில்லி சுல்தான் உதவியை நாடி பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமானான் சுந்தரபாண்டியன்.

4. தொடர்ச்சியான முகமதியப் படையெடுப்புகளால் பாண்டியர் ஆட்சி வீழ்த்தப்பட்டு மதுரையில் சுல்தான் ஆட்சி தொடங்கியது.

பாண்டியரை வீழ்த்தி, பாண்டியர் ஆட்சியை அழித்தது வடுகரான விசய நகரப் பேரரசு என்பது வரலாற்று மோசடி . பின் எப்படி விசயநகரப் பேரரசு உருவாயிற்று? எப்படி மதுரையை வடுகர்கள் ஆண்டனர்?  அதற்கு முன் மதுரை சுல்தான்கள் எப்படி பாண்டியரை வீழ்த்தினர் என்று பார்க்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.