பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்: மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற முயற்சி

06 February 2026

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மிகப்பெரிய கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.


பிரதமர் மோடி மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில், சுமார் 800 நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனமாட உள்ளனர். இந்தியப் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், ஒடிசி, கதக், கதகளி, மோகினியாட்டம், குச்சிப்புடி மற்றும் யக்ஷகானா ஆகியவற்றுடன் தமிழ், லாவணி, பஞ்சாபி, ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நாட்டுப்புற நடனங்களும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அயல்நாட்டில் இந்தியக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த முயற்சி, "ஒரே மேடையில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்கும் இந்திய நடன நிகழ்ச்சி" என்ற பிரிவின் கீழ் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலைஞர்களின் இந்த சாதனையை அங்கீகரித்து, நிகழ்ச்சி முடிந்த உடனேயே அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.