கரூரில் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து: 18 மாணவர்கள் காயம்

14 March 2026

கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பேருந்து, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வெள்ளியணை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், தனியார் சிமெண்ட் ஆலைக்கு ஜல்லி கற்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்து பேருந்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததோடு, அதில் பயணம் செய்த 18 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.