மம்தா கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்த யஷ்வந்த் சின்கா; ஜனாதிபதி வேட்பாளராகிறாரா..?

21 June 2022

தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக மம்தா கட்சியில் இருந்து தான் விலகுவதாக யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா, புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது, ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாளாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் தற்போது எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொதுவேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதற்காக ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
பாஜகவின் உயர்மட்டக் குழுவான நாடாளுமன்றக் குழு இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்த பெயர் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார்போல் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா இன்று திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளித்த மரியாதை மற்றும் கவுரவத்துக்கும் மம்தாபானர்ஜிக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இப்போது தேசத்தின் பெரிய நோக்கத்திற்காக நான் கட்சியில் இருந்து ஒதுங்கி, எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கிறது. என்னுடைய செயலுக்கு மம்தாஜி பானர்ஜி சம்மதிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று அதில் யஷ்வந்த் சின்கா பதிவிட்டுள்ளார். இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சரத்பவார் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக உள்பட 17 எதிர்கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.