ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்.

28 August 2021

 தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.

 இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். காபூல் விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோராசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 இதையடுத்து, காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ''காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம்'' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்கும் வகையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா. ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாடு அறிவுறுத்தியுள்ளது.