சர்ச்சையில் சிக்கிய 'தி ஃபேமிலிமேன்' 2!

27 May 2021

அமெசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள டிரெய்லரின் சில காட்சிகள் சர்ச்சை ஆனதால், அந்த வெப்சீரிஸ் தொடர் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.'தி ஃபேமிலி மேன்- சீசன்1' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டிரெய்லரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.அந்த டிரெய்லருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு காணப்பட்ட அதே சமயம், அதில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் கதாபாத்திரமும், கதைக்களமும் சர்ச்சையாகியிருக்கின்றன.

'தி ஃபேமிலி மேன்' சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானது என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது மட்டுமில்லாமல் வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி ஃபிமிலி மேன் சீசன் 2 தொடரை தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வெளியிட தடை விதிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

"தமிழருடைய வரலாறு, தமிழருடைய கலாசாரம், ஈழத் தமிழருடைய போராட்டம் போன்றவற்றை கொச்சைப்படுத்தும் விதமாகத்தான் அந்த தொடரில் காட்சிகள் உள்ளன. ட்ரெய்லரை பார்த்துட்டு முடிவு பண்ண வேண்டாம் என்று பலரும் கருத்து கூறியுள்ளனர். ஆனால்,, அந்த டிரெய்லர் காட்சிகளே அதன் ஆபத்து என்ன, பிரசாரம் எதை நோக்கி நகருகிறது என்பதை தெளிவாக சொல்கிறது."

"இது ஒரு இந்தி சீரிஸ் என்பதால, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனாலதான் மத்திய அரசிடம் தடை செய்யக் கோரி கடிதம் எழுதியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கடந்த 10 வருடங்களாகவே, தமிழர்களுடைய நலன் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்போது புதிதாக பதவியேற்று இருக்கக்கூடிய தமிழக அரசு தமிழர்களுடைய நலனை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த மாதிரியான சின்னஞ்சிறு சலனங்களுக்கு திமுக அரசு இடம் கொடுக்காது. இதற்கு மத்திய அரசும் ஒத்துழைப்பு தர வேண்டும்."

எந்தவொரு விதத்திலும் தமிழர்களுடைய நலனுக்கு பயன் தரக்கூடிய வகையில் வெப் சீரிஸ் இருக்கவில்லை. பொழுதுபோக்கு என்பது வேறு, வரலாறு என்பது வேறு. உணர்வுகளை கொச்சைப்படுத்துவதும், வரலாற்றை திரிக்க முற்படுவதையும் இங்கே பொழுதுபோக் எனக் கூறி அனுமதிக்க முடியாது.

தமிழர்கள் இப்போது உலகம் அளவில் வாழ்கிறார்கள். அவர்களுடைய உணர்வு பாதிக்கப்படுவதை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாவும் நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் இதை ஒரு சின்ன பிரச்னையாக சுருக்கிட முடியாது. பெரிய இனத்தின் பிரச்னையாவே பார்க்க வேண்டும். தமிழக அரசிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை படக்குழு கொடுத்தால், அதன் பிறகு முடிவு என்ன என்பதை ஆலோசிக்கலாம். ஆனால், இப்போதைய சூழலில் அந்த தொடருக்கு தடை என்பது அவசியம்," என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

வெப்சீரிஸ் தொடருக்கு தடை எனும்போது படைப்புச் சுதந்திரத்தை இது பாதிக்கும் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறதே? என்று அமைச்சரிடம் கேட்டபோது, "அடிப்படையில் இது ஒரு இந்தி சீரிஸ். அந்த கதைக்களத்தில் தமிழர்களை மையப்படுத்தி சர்ச்சையான காட்சிகளை அமைத்து இதை படைப்பு சுதந்திரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கருத்துரிமை என்பது கருத்துகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் சொல்லக்கூடியது. ஆனால், இழிவுப்படுத்துவது போன்றோ, உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடுவதையோ கருத்துரிமை என்று நியாப்படுத்த முடியாது".

"மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இன்னும் அங்கிருந்து பதில் வரவில்லை. கிடைக்கப்பெறும் பதிலை வைத்து நடவடிக்கை இருக்கும். இல்லையெனில் தமிழக முதல்வரோடு கலந்தாலோசித்து தெரியப்படுத்துவோம்" என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்..

"இதேபோல, டிரெய்லர் காட்சிகளை மட்டும் வைத்து தடை கோருவதும் வரவேற்கக்கூடியது இல்லை. காரணம், அதுவும் ஆபத்திலேயே முடியக்கூடிய விஷயம். நடக்காத ஒரு விஷயத்தை கற்பனையில கொண்டு வருவது மாதிரி காட்சிப்படுத்தும்போது அதற்கான நியாயம் சீரிஸில் இருக்கிறது மட்டுமே சரியா இருக்கும். காரணம், இப்போது ஓடிடியில் படைப்பாளிகளுக்கான தளம் விரிவாகியிருக்கிறது. அதை சர்ச்சைக்குள்ளாக்கி கெடுத்து விட வேண்டாமே," என்கிறார் பிரபல இயக்குநர் பிரசாத் முருகேசன்.

நாங்கள் தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், போராட்டங்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்துள்ளோம். நிச்சயமாக இந்த தொடர் நல்ல கருத்துக்களை மட்டுமே பேச இருக்கிறது என்கிறார்கள் இந்த தொடரை இயக்கிய இயக்குனர்கள்.