கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

04 April 2021

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவானது. மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு  தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் மோடி உயர் மட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கேபினட் செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது.