நொய்டா சர்வதேச திரைப்பட விழா: 'ஜெய்பீம்' தேர்வு

20 January 2022

சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. 


ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்திரித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகளை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருப்பதாக இந்தப் படத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

முன்னதாக கடந்த ஜன-18 ஆம் தேதி ஜெய் பீம் திரைப்படத்தின் காட்சிகளை படத்தின் இயக்குநர் ஞானவேல் விளக்கும் விடியோ ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஜெய் பீம் திரைப்படம் பெற்றது.இந்நிலையில், உலகளவிலும் பெரும் கவனம் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படம் 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியிடும் திரைப்படங்கள் பங்கேற்கும் இவ்விழா வருகிற ஜன.23 ஆம் தேதி நொய்டாவில் நடைபெற உள்ளது.