சுதந்திர போராட்ட வீரர்களை அறியப்படுத்துக எல்.முருகன் வலியுறுத்தல்

31 August 2021

சுதந்திர போராட்டத்தில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம் குறித்த தகவல்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை பொதிகை தொலைக்காட்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன் சென்னையில் உள்ள பொதிகை தொலைக்காட்சி செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை தொலைக்காட்சி நிலையம் வந்திருந்த அவரை பொதிகை தொலைக்காட்சி துணை தலைமை இயக்குனர் கிருஷ்ணதாஸ், நிகழ்ச்சி பிரிவு தலைவர் சையது ரபீக் பாஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர், "சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் இருந்து எண்ணற்ற வீரர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த சுதந்திர போரில் அதிகம் அறியப்படாத தமிழக வீரர்களின் தியாகம், வீரம் ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பொதிகை தொலைக்காட்சி தங்களது செய்திகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக 5 கிலோ இலவச அரிசி/ கோதுமை திட்டத்தின் பயன்கள், பிரதமரின் ஜன் தன் யோஜானா, மக்கள் மருந்தகம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றின் நோக்கம் குறித்து தொலைக்காட்சி மூலம் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்கள் விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் என்றும் ஓரளவுக்காவது சுயமாக  வருவாயை ஈட்டும் வகையில், பொதிகை தொலைக்காட்சி தங்களது தரத்தினை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  

தொடர்ந்து, தொலைக்காட்சியின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து இணையமைச்சரிடம் விளக்கப்பட்டது. மேலும், அதுகுறித்த காணொலியும் ஒளிபரப்பப்பட்டது.  

அடுத்து அகில இந்திய வானொலி & சென்னை தொலைக்காட்சி கூடுதல் தலைமை இயக்குனர் (பொறியியல்) அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார்.

இந்த கூட்டத்தில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை, பொதிகை தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்திய வானொலியை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.