குடமுருட்டி ஆற்றில் மணல் இல்லாமல் கட்டாந்தரையாக மாறியதால் நிலத்தடி நீர் பாதிக்கும் விவசாயிகள் வேதனை!

14 June 2021


திருவாரூர் குடமுருட்டி ஆற்றில் மணல் இல்லாமல் கட்டாந்தரையாக மாறியதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்லணையில் இருந்து காவிரி, புதுஆறு, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் காவிரியில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் ஒன்றான குடமுருட்டி ஆறு தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளையும், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாகச் செல்கிறது. . குடமுருட்டி ஆறு. பல்வேறு கிராமங்களில் முக்கிய பாசன ஆறாக பயன்பட்டு வருகிறது. இந்த குடமுருட்டி ஆறு முடிவில் வங்க கடலில் சென்று கலக்கிறது.

குடமுருட்டியில் தண்ணீர் முழு அளவில் வந்தால் முப்போக நெல் சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ளலாம் என விவசாயிகள் கூறுகிறார்கள். இந்த ஆற்றில் நிலத்தடி நீரை உறிஞ்சி சேமிக்கும் வகையில் முன்பு 5 அடி அளவில் உயரமாக மணல் நிரம்பி இருந்தது. ஆற்றின் வளத்தை பாதுகாக்கும் அம்சமாக மணல் விளங்கியது. கனிம வளங்களில் ஒன்றாக போற்றப்படும் மணல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சுரண்டப்பட்டு மணல் எடுத்து வந்ததன் விளைவாக வலங்கைமான் பகுதியில் குடமுருட்டி ஆற்றின் தரை பகுதியில் தற்போது மணல் மேடுகளுக்கு பதிலாக மண் மேடாகி கட்டாந்தரைபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைந்து விட்டதாகவும், இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கும் என்றும் இயற்கை ஆர்வலர்களும், விவசாயிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘குடமுருட்டி ஆற்றில் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்டு இருந்த மணல் தற்போது இல்லை. இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகி விடும். ஆற்றின் தன்மையை பாதுகாக்கும் விதமாக மணல் கொள்ளையை இரும்பு கரம் கொண்டு தடுக்க அரசு முன்வர வேண்டும். ஆற்றின் இருபுறமும் கரைகளில் மணல் அள்ள பயன்படுத்தப்படும் வாகனவழித் தடங்களில் தடை ஏற்படுத்த வேண்டும். கரைகளில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் நீண்ட ஆயுட்கால மரக்கன்றுகளை நட வேண்டும். முன்பு மணல் நிறைந்து காணப்பட்ட இந்த குடமுருட்டி ஆறு தற்போது மண் தரையாக காட்சியளிக்கிறது. எனவே இனியாவது இந்த குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நிருபர்் மீனா திருவாரூர்