மதுரையில் முககவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூல்
08 April 2021
மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை யில் உள்ளவர்களின் வீடுகள் மற்றும் தெருக்கள் தடுப்பு வேலிகள் அடைத்து தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் தமிழன்னை சிலை அருகே மாநகராட்சி அதிகாரிகள் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களை பாரபட்சம் பார்க்காமல் நிறுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர். அதேபோல் அரசு பேருந்து மற்றும் அனைத்து தனியார் வாகனங்களிலும் முகக் கவசம் அணியாமல் சென்றால் அவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.